செல்லமே உந்தன் சிவந்த கன்னம் கண்டு
ராகம் : தேஷ்
செல்லமே உந்தன் சிவந்த கன்னம் கண்டு
கவலையில் கருத்தது அந்தி வானம்
கார் முடிக்கற்றையின் காரொளி தனைக் கண்டு
முகம் வெளுத் தொளிந்ததோ முன்னிருட்டு. (செல்லமே)
காலம் கடந்தது தெரியவில்லை - நாமோ
காரிருள் பகல் ஏதும் அறியவில்லை
பிரிந்தவர் நாம் கூட பேசுவது எங்கே
பின்னும் முன்னும் அறிவது எங்கே. (செல்லமே)
இருள் சூழ் நேரத்தில் என் முன்னில் நீ வர
இன்முகம் கதிரொளி தனை வீசும்
பகலவன் காய்கையில் பக்கத்தில் நீ வர
மதிமுகம் தண்ணொளி தனை யீயும். (செல்லமே)
கண்மணி நீ என் கரம் பிடித்துடன் வந்தால்
கால மாற்றங்கள் தெரியாது
காலமாம் கன்னிப் பருவமும் நீயே
கடல் வான் புவி அழல் காற்றும் நீயே. (செல்லமே)
K.Balaji
March 27 2019
11.45 pm
ഓമനേ നിൻ കവിൾ കുങ്കുമം കണ്ടപ്പോൾ Oman's non kaviL kunkumam kaNdappOL என்ற மலையாளப் பாடலின் மொழிபெயர்ப்பு
இதற்கு நண்பன் ராம் சரசுராமின் விமர்சனம் :
"மன்னிக்கணும்ப்பா. இன்று முழுவதும் பிஸி. பிஸியாக இருப்பது என்பது வரமா சாபமா தெரியவில்லை. அம்மாவுக்கு கைகளில் கொஞ்சம் பிரச்சனை இருக்கிறது. ஸ்கின் ப்ராப்ளம். எத்தனை சொன்னாலும் கேட்காமல் அந்த கைகளிலேயே பல வேலைகள் பார்ப்பார்கள். அது அவரது குணம். மாற்றுவது கடினம். ஆகவே அந்த பிரச்சனை கொஞ்சம் சரியாகும். பிறகு தொடரும். இதுவொரு தொடர்கதை. இன்னைக்கு அது சம்மந்தமாக ஒரு டாக்டரிடம் போக வேண்டி இருந்தது. மதியம் 1 மணிக்கு மேல் அப்பாயிண்ட்மெண்ட். கொழுத்துகிற வெய்யில். வெய்யிலின் எதிரொலியில் வண்டியில் வியர்வை சிந்த ஒரு பயணம். கிட்டத்தட்ட 30 கிமீ. திரும்பி வரும் போதும் அந்த வெய்யில் வெளியே காத்திருந்து மீண்டும் என்னைத் துரத்த தொடங்கியது. வீட்டிற்கு வந்துதான் உங்கள் மொழிபெயர்ப்பு கவிதையை படிக்கத் தொடங்கினேன். "செல்லமே உந்தன் சிவந்த கன்னம் கண்டு.." நிஜமாய் இந்த ஆரம்ப வரியிலேயே அசந்து போனேன். என்னவொரு க்யூட்! ஒரு குழந்தையின் குண்டு கன்னம் மாதிரி.! தொட்டுத் தொட்டு படிக்கத் தோன்றியது. அதற்கு அடுத்த வரியிலேயே கற்பனை இன்னும் அழகாய் சிறகடித்தது. "கவலையில் கருத்தது அந்தி வானம்..".
காதல் உலகத்தின் அற்புதம். அதுதான் இந்த காலத்தையே நகர்த்துகிறது. அந்த உணர்வே இந்த வாழ்வின் உன்னதம். அதை கொண்டாடத் தெரிந்தவனே வாழ்கிறான். "காலம் கடந்தது தெரியவில்லை - நாமோ
காரிருள் பகல் ஏதும் அறியவில்லை.." "கண்மணி நீ என் கரம் பிடித்துடன் வந்தால்
கால மாற்றங்கள் தெரியாது." இந்த வரிகளில் அந்த காதலின் நிலை இன்னும் கவித்துவமாகிறது. அதிலும் "பகலவன் காய்கையில் பக்கத்தில் நீ வர
மதிமுகம் தண்ணொளி தனை யீயும்.." - வாவ்! என்னவொரு அழகு! ஏம்ப்பா அந்த ஒரிஜினல் கவிதையில் இவ்வளவு அழகான வார்த்தையும் கவித்துவமும் இருந்ததா? இல்லை அது இன்னும் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக உங்கள் கற்பனைகள் செய்த வேலையா? மொழிபெயர்ப்பு கடினமான பணி! அந்த மொழிக்கு இணையான வார்த்தைகளை தேடி, அந்தக் கவிதையில் அந்த கவிஞன் என்ன உணர்ந்தானோ அந்த உணர்வை நம் மொழியில் தருவதென்பது கடினமான இலக்குத்தான். அதை உங்கள் உழைப்பும் கற்பனையும் அற்புதமாய் செய்திருக்கிறது. "செல்லமே உன் சிவந்த கன்னம் கண்டு" வை உங்கள் குரலிலும் கேட்கக் கிடைத்ததுதான்ப்பா நான் பெற்ற பேரின்பம்! அந்த கவிதை வரிகளுக்கு இன்னும் ஒளியூட்டியது என்னை பொறுத்தவரை உங்கள் குரல்தான். அதுதான் என் எதிர்பார்ப்பு! அதற்கு என் நன்றிகள்ப்பா. நீங்கள் எனக்குக் கிடைத்ததை ஒவ்வொரு நொடியும் பெருமைப்படும் என் மனம் இன்றும் இன்னும் ஒரு படி மேலே போய் காலரை தூக்கி விட்டு பெருமைப்பட்டுக் கொண்டது. இந்தத் தமிழ் போல் என்றும் நீங்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதே என் பிரார்த்தனை! இன்று பகல் முழுவதும் என்னையே சுற்றிக் கொண்டிருந்த வெய்யில் இந்த கவிதையைப் படித்த பின் சட்டென விலகிப் போனது. வராந்தாவில் அமர்ந்து வானம் பார்த்து கொண்டேதான் இதை எழுதுகிறேன். அடித்த காற்றில் அவ்வளவு குளிர். அது இந்த கவிதையில் பிறந்த குளிர்!! நன்றிப்பா. நிறைய நிறைய எழுதுங்கள். அது எங்கள் மனதிலும் வந்து நிறையட்டும். வாழ்த்துக்கள்!!
👏👌👍💐😊🙏"
No comments:
Post a Comment